கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும்! மோடி முன்னிலையில் முதலவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

திண்டுக்கல்: காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் முன்னிலையில் வலியுறுத்தினார்.

திண்டுக்கல், காந்தி கிராம பல்கலைக்கழகத்தி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமப்புற மேம்பாட்டிற்கான அறிவாலயமாக திகழும் காந்தி கிராம பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார். குஜராத்தில் பிறந்து ஒற்றுமை, சமூக நல்லியக்கத்தை வலியுறத்தி இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்த காந்திக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள உறவு மிக மிக அதிகம் என கூறினார்.

தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டிற்கு வந்த காந்தி தமிழை விரும்பி படித்தவர். மு.க காந்தி என தமிழில் கையெழுத்திட்டவர். மேலும் திருக்குறளை படிக்க தமிழை கற்றவர். உயராடை அணிந்து அரசியலுக்குள் நுழைந்த அவரை அரையாடை உடுத்த வைத்தது இந்த தமிழ் மண் என கூறினார்.

வட இந்தியர்கள் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியை கற்க வேண்டும். அது தமிழாக இருக்க வேண்டும் என சொன்னவர் காந்தி. அவரது பெயரில் இயங்கும் இந்த பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.