சட்ட தொழிலில் ஆணாதிக்கம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை

புதுடெல்லி: வக்கீல் தொழில் ஆணாதிக்கம் நிறைந்தது என்றும் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தகுதியின் அடிப்படையில் இதில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த புதன்கிழமை பதவி ஏற்றார். இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த ஆங்கில பத்திரிகையின் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ‘‘நீதித்துறையின் முன் பல்வேறு சவால்கள் உள்ளன. சமூக, சட்ட பிரச்னைகள் மற்றும் அரசியல் விவகாரங்களும் உச்சநீதிமன்றத்திற்கு வருகின்றன.  

நீதித்துறை வாயிலாக பல்வேறு நபர்கள் பயிற்சி பெற்று வழக்கறிஞர்களாகின்றனர்.  நீதித்துறைக்கு  யார் செல்கிறார்கள் என்பதை இதில் உள்ளவர்கள் தான் தீர்மானிக்கின்றனர். இந்தியாவில் தற்போது வக்கீல் தொழில்  ஆணாதிக்கம் நிறைந்ததாக உள்ளது. அதில் பெரும்பாலும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை. பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களை  சேர்ந்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் இந்த துறையில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதற்கான  அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவது அவசியம்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.