ஆக்ரா: அறுவை சிகிச்சைக்குப் பின் தனது இடதுபக்க கிட்னி மாயமாகி இருப்பதாக நோயாளி ஒருவர் புகார் அளித்திருக்கும் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கஸ்கன்ச் மாவட்டம் நகலா தால் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் சந்திரா (53). அரசு அலுவலகத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதால், கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி அலிகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து கொண்டுள்ளார். அன்றைய தினமே அறுவை சிகிச்சை முடிந்து கற்கள் அகற்றப்பட்டுள்ளன. அடுத்த 3 நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 29ம் தேதி சுரேஷுக்கும் அடிவயிற்றில் மீண்டும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால் டாக்டரிடம் சென்ற போது, வயிற்றில் உள்ள தழும்பு பற்றி அவர் சந்தேகமடைந்துள்ளார். இதனால் ஸ்கேன் செய்து பார்த்ததில், சுரேஷின் இடதுபக்க சிறுநீரகம் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ், மாவட்ட சுகாதார துறையில் புகார் அளித்துள்ளார். கிட்னி மாயம் குறித்து சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் கேட்ட போது உரிய பதில் தராததால் சுகாதாரத்துறையை சுரேஷ் நாடி உள்ளார்.