ஆந்திராவில் ஆட்சியை பிடிக்க சந்திரபாபு நாயுடு மகன் ஓராண்டு நடை பயணம்

திருமலை: ஆந்திராவில் 2024 தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்காக, சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், ஓராண்டுக்கு நடை பயணம் மேற்கொள்கிறார். ஆந்திராவில் 2024ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை பிடிக்க தெலுங்கு தேசம் கட்சி வியூகம் வகுத்து வருகிறது. இக்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபுவுக்கு வயது முதிர்வு  ஏற்பட்டு உள்ளது. இதனால், பழையபடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் சிரமம் உள்ளது.

இதனால், அவரது மகனும், தெலுங்கு தேசம் கட்சி பொதுச்செயலாளருமான நாரா லோகேஷ், மக்களின் ஆதரவை பெறுவதற்காக அடுத்தாண்டு ஜனவரி முதல் பாதயாத்திரை தொடங்குகிறார். ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து, ஆந்திராவில் உள்ள தனது தந்தையின் தொகுதியான குப்பத்துக்கு லோகேஷ் செல்கிறார். அங்கு, 27ம் தேதி முதல் தனது நடை பயணத்தை தொடங்குகிறார். இது, ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் வரை ஓராண்டுக்கு மேலாக மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், வேலையில்லா திண்டாட்டம் ஒழிப்பு, இளைஞர் நலன்,  விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்த நடை பயணம் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.