
முதல் தெலுங்குப் படம் 'வர்ஷம்' ரீ-ரிலீஸ் : த்ரிஷா மகிழ்ச்சி
தமிழ், தெலுங்கில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு நம்பர் 1 இடத்தில் இருந்தவர் நடிகை த்ரிஷா. தமிழை விட தெலுங்கில் அவர் நிறைய வெற்றிப் படங்களிலும் முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்திருக்கிறார். இப்போதும் அவருக்கென அங்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.
த்ரிஷா, தெலுங்கில் அறிமுகமான முதல் படம் 'வர்ஷம்'. சோபன் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக அந்தப் படம்தான் த்ரிஷா, தெலுங்கில் அறிமுகமான படம். அப்படத்தைத் தற்போது ஆந்திரா, தெலங்கானாவில் மீண்டும் வெளியிட்டுள்ளார்கள். பெரிய வெற்றி பெற்ற அந்தப் படத்தை மீண்டும் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வீடியோவைப் பதிவிட்டு த்ரிஷா, “18 ஆண்டுகளுக்குப் பிறகு…ஒரு ரீ–ரிலீஸ்…எனது முதல் தெலுங்குப் படம். இப்போதும் நேற்று நடந்தது போல இருக்கிறது. திரைப்படங்கள் என்றென்றும் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. 9456743 முறை சொல்கிறேன், உங்களால்தான் நான்,” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
'வர்ஷம்' படம் தமிழில் 'மழை' என்ற பெயரில் ஜெயம் ரவி, ஸ்ரேயா சரண், வடிவேலு நடிக்க ரீமேக் ஆகி வெளிவந்தது. ஆனால், தெலுங்கில் பெற்ற வெற்றியை தமிழில் பெறவில்லை.