ஜி-20 மாநாடு..பிரதமர் மோடி நாளை இந்தோனேசியா செல்கிறார் ..

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பே ஜி-20 கூட்டமைப்பாகும். இதில் இந்தியா கடந்த 1999ம் ஆண்டு இணைந்தது. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) யில் 85 சதவிகிதம் இந்த நாடுகளுக்கு சொந்தமானதாக உள்ளதால், ஜி-20 கூட்டமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேபோல், உலகில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் 65 சதவிகிதம் இந்த 20 நாடுகளுடையது தான். எனவே ஒவ்வொரு ஆண்டும் கூட்டப்படும் இந்த ஜி-20 கூட்டமைப்பு, மிகுந்த முக்கியத்துவத்துடன் நடத்தப்படுகிறது.

ஜி-20 நாடுகளின் அமைப்பின் தலைமை பொறுப்பை, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு சுழற்சி முறையில் வகித்து வருகிறது. அந்த வகையில் வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை, ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பை இந்தியா தலைமை ஏற்று நடத்துகிறது. ஜி-20 க்கான இந்தியாவின் கருப்பொருள் (தீம்) ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தநிலையில் 2022ம் ஆண்டுக்கான ஜி20 மாநாடு, இந்தோனேசியாவின் பாலி நகரில் வருகிற நவம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறவுள்ளது. இதில அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல், உச்சி மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியிலிருந்து பாலி நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார்.

பில்கிஸ் பானு குற்றவாளிகளுக்கு ஆதரவு கருத்து: பாஜக எம்எல்ஏவுக்கு தேர்தலில் மீண்டும் சீட்.!

இதுதவிர மாநாட்டின் போது பல்வேறு நாட்டு தலைவர்களிடம் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஜி-20 உச்சி மாநாடு, டெல்லியில் 2023-ம் ஆண்டு செப்டம்பர் 9, 10ம் தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.