சீர்காழியில் மழையினால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மயிலாடுதுறை: சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக  முதலமைச்சர் அவர்கள் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். கனமழையால் சேதம் அடைந்த பயிர்கள் முறையாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்.
 
குறிப்பாக சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளித்து வருகிறது. இந்த நிலையில், கடலூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.

கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இன்று  மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் அவர்கள் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். மேலும் கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் அணைத்து விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.