எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தைத் தன்வசமாக்கியது முதல் பல அதிரடி நடவடிக்கைளை எடுத்து டாக் ஆஃப் தி வேர்ல்டு ஆக மாறியிருந்தார். இதையடுத்து பலர் ட்விட்டரின் ப்ளூ டிக் முதல் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் வரை அவரின் புதிய நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர். மற்றொருபுறம், எலான் மஸ்க் ட்விட்டரில் மட்டுமே தன் முழுக் கவனத்தையும் செலுத்தி வருவதால், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தை அவர் சரியாகக் கவனிப்பதில்லை. இதனால் இவ்விரு நிறுவனங்களும் மிகப் பெரிய சரிவைச் சந்திக்கும் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், டெஸ்லாவின் தயாரிப்பான டெஸ்லா ‘Y’ வகையைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் ஒன்று சீனாவில் கட்டுப்பாடின்றி தாறுமாறாக ஓடியுள்ளது. இதனால் ஏற்பட்ட விபத்தில் பள்ளிக் குழந்தை மற்றும் பைக்கில் சென்ற ஒருவர் உட்பட மொத்தம் இரண்டு பேர் படுகாயமடைந்து இறந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பகுதி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது குறித்து இந்தக் காரை ஓட்டி வந்த 55 வயதான நபர் கூறுகையில், “காரின் பிரேக் சுத்தமாக வேலை செய்யவில்லை அதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடிவிட்டது!” என்று சோகமாகக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெஸ்லா கார்களில் பிரேக் சிஸ்டத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்று இதற்கு முன் பலர் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இது போன்ற பிரச்னைகளைச் சரி செய்யாமல் எலான் மஸ்க் ட்விட்டரில் விளையாடி வருவதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.