இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று G-20 நாடுகளின் உச்சிமாநாடு தொடங்கியிருக்கிறது. இதற்காக இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில், கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இந்த G-20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க இருக்கின்றனர்.

இந்த நிலையில், G-20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனா தொற்றுக்குப் பிறகு உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் இருக்கிறது. அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டுத் தீர்மானம் தேவை. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான பாதையை கண்டெடுக்க வேண்டும் என நான் பலமுறை கூறியிருக்கிறேன். உக்ரைன் மோதலை ராஜதந்திரம் மூலம் தீர்க்க வேண்டும். இந்த போரினால் உலகளாவிய உணவு, எரிபொருள் விநியோக சங்கிலி சீர்குலைந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டில், 2-ம் உலகப் போர் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது. அன்றைய தலைவர்கள் உலகம் அமைதிப் பாதையில் செல்ல தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.

இந்தியாவின் ஆற்றல், பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியமானது. இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம். எனவே, எரிசக்தி விநியோகத்தில் எந்தவிதக் கட்டுப்பாடுகளையும் நாம் ஊக்குவிக்கக்கூடாது. தூய்மையான எரிசக்தி, சுற்றுச்சூழலுக்கு இந்தியா உறுதிபூண்டிருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் மின்சாரத்தில் பாதிக்கு மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும். இன்றைய உரத்தட்டுப்பாடு என்பது நாளைய உணவு பற்றாக்குறைக்கு காரணமாக இருக்கும். உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உரத்தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண ஒன்றிணைய வேண்டும். இந்தியாவில், நிலையான உணவுப் பாதுகாப்புக்காக, நாங்கள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறோம்.

தினை போன்ற சத்தான பாரம்பர்ய உணவு தானியங்களை மீண்டும் பிரபலப்படுத்துகிறோம். தினைகள் உலகளாவிய ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசியையும் தீர்க்கும். அடுத்த ஆண்டு நாம் அனைவரும் சர்வதேச தினை ஆண்டை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்” என்றார்.