காரைக்கால் நவோதயா பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியின் காவலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கோட்டுச்சேரியை அடுத்த இராயன்பாளையத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். பள்ளி காவலாளியாக, நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த முகம்மது அலி(54) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலை, பள்ளி விடுதியில் இருந்த 12 வயதுடைய 8-ம் வகுப்பு படிக்கும் மாணவரை தனியாக அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவன் தன் பெற்றோரிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விசாரணை செய்த போலீசார், புகாரில் உண்மை இருப்பதை அறிந்து முகம்மது அலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.