மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று (16.11.2022) பார்வையிட்டு ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கினார்.
சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ மழை பெய்ததால், சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. உப்பனாறு, புதுமண்ணியாறு போன்றவற்றில் ஏற்பட்ட கரைகள் உடைப்பால் , ஏராளமான குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 14 -ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிச் சென்றார்.
திருவெண்காட்டில் மாமனார் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கியும், கோயில் திருமாளத்திலுள்ள தாய்மாமா தட்சிணாமூர்த்திக்கு 100-ம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஆசிபெற்றும் சென்றார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சீர்காழி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சீர்காழி அருகேயுள்ள நல்லூர், பன்னீர்க்கோட்டம், ஆலங்குடி உள்ளிட்டப் பகுதிகளில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் பாதிப்புகள், குறைகள் குறித்து கேட்டறிந்தார். விவசாயிகள் வயலில் இறங்கி அழுகிய பயிர்களை எடுத்துக் காண்பித்து உரிய நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவர்களிடம் மிகவும் ஆறுதலாகப் பேசினார். வழியெங்கும் அவருக்கு மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வரவேற்பளித்தனர். இந்த ஆய்வின்போது முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பவுன்ராஜ், பாரதி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.