சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அதிகாலை 3 மணிக்கே நடை திறப்பு: 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருப்பதால், காலையில் கோயில் நடை ஒரு மணி நேரம் முன்னதாகவே திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதால், நடை திறந்த 16ம் தேதி மாலை முதலே சபரிமலையில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில், நேற்று சனிக்கிழமை என்பதால் நேற்று முன்தினம் இரவு முதலே சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

இதனால் நேற்று முன்தினம் இரவில் 18ம் படி முன் தொடங்கிய பக்தர்களின் நீண்ட வரிசை நேற்றும் தொடர்ந்தது. பக்தர்கள் 8 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். நெய்யபிஷேகம்  செய்யவும் காத்துக் நிற்கின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் மண்டல, மகர விளக்கு காலங்களில் காலையிலும், மாலையிலும் 4 மணிக்குத் தான் நடை திறக்கப்பட்டு வந்தது. ஆனால், இவ்வருடம் பக்தர்களின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து மண்டல காலத்தின் முதல் நாளிலிருந்தே அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வருகிறது. பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் நடை சாத்தப்பட்டு 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. பிறகு இரவு 11 மணிக்குத்தான் நடை சாத்தப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.