இந்தியாவின் இளம் வயது மேயர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இவர் மாநகராட்சியின் கீழ் 295 தற்காலிக பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களின் பட்டியலை தருமாறு கேட்டு மாவட்ட செயலாளர் ஆனாவூர் நாகப்பனுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று சமீபத்தில் வெளியானது.
இது தொடர்பாக மேயர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சியை சேர்ந்த இளைஞர் காங்கிரசார், பா.ஜ.க. யுவ மோர்ச்சா அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் அந்த கடிதத்தை தான் எழுதவில்லை என்று மேயர் ஆர்யா ராஜேந்திரன் மறுத்து வருகிறார். இந்நிலையில் மேயர் எழுதியதாக வெளியான கடிதத்தை யார் எழுதியது, யார் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது என்று குற்றப்பிரிவு போலீஸ் விசாரிக்க கேரள டி.ஜி.பி. அனில் காந்த் உத்தரவிட்டுள்ளார்.
மேயர் கடிதம் எழுதியதாக கூறப்படும் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள், மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். இதனால், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
newstm.in