அசாமில் நெகிழ்ச்சி இறந்த காதலிக்கு திலகமிட்டு தாலி கட்டி மணந்த காதலன்: வாழ்நாள் முழுவதும் தனியாக வாழ்வதாக சபதம்

திஸ்பூர்: நோய் வாய்ப்பட்டு இறந்த காதலியின் சடலத்திற்கு நெற்றியில் குங்குமமிட்டு, மாலை மாற்றிக் கொண்டு காதலன் திருமணம் செய்து கொண்ட உருக்கமான சம்பவம் அசாமில் நடந்துள்ளது. அசாம் கவுகாத்தியில் வசிப்பவர் பிதுபன் தமுலி (27). இவரது காதலி பிரதனா போரா. சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவால் கவுகாத்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதனா கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பிரதனாவின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பிதுபன், யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது காதலியின் சடலத்தையே திருமணம் செய்து கொண்டார். நெற்றியில் குங்குமிட்ட அவர், மாலை மாற்றிக் கொண்டார். அதோடு காதலி சடலத்திற்கு முன்பாக, ‘வாழ்நாளில் நீ மட்டுமே என் மனைவி. இனியும் நான் உன் நினைவாகவே தனியாகவே வாழ்வேன்’ என சபதமும் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.

பிரதனாவின் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘பிதுபன், பிரதனா காதலிப்பது இரு வீட்டார் குடும்பத்திற்கும் தெரியும். அவர்களுக்கு திருமணம் செய்யவும் பேசி முடிவு செய்திருந்தோம். திடீரென பிரதனா இறந்ததால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். இந்த நிலையில், பிரதனா இறந்த பிறகும் அவரை மணந்து அவரது கடைசி ஆசையை நிறைவேற்றப் போவதாக பிதுபன் கூறினார். இதை நாங்கள் கனவிலும் நினைக்காத சம்பவம். உண்மையிலேயே பிரதனா கொடுத்து வைத்தவள்தான்’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.