சென்னை: அரசு கேபிள் டிவி சேவை தடங்கலுக்குக் காரணமான மென்பொருள் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் கடந்த நவ.19-ம் தேதி முதல் திடீரென தடை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை பலபகுதிகளில் உள்ள செட்-டாப் பாக்ஸ்களில் தடைபட்டது. பாதிப்புகளைஉடனடியாக சரிசெய்ய தொழில்நுட்பக் குழு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரிசெய்யப்படும்.
அந்த தனியார் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.