சிவசங்கர் பாபாவுக்கு நெருக்கடி – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு அந்தப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்கக் கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், சட்டப்படியான தடை உள்ளதாகவும் கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக் கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா விசாரித்தார்.

அப்போது சிவசங்கர் பாபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கால தாமதமாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக் கூடாது என வாதிட்டார். காவல் துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புகார் தாரர் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்றார். மேலும், சிவசங்கர் பாபாவின் மனுவை விரிவான இறுதி விசாரணைக்காக நவம்பர் 29 ஆம் தேதி பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.