புதுடெல்லி: மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு 3 மாதத்துக்குள் சட்டத் துறை அதிகாரியை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள கால அவகாசத்துக்குள் நியமனம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்க தடை விதிக்க கோரி தமிழ்நாடு நூற்பாலை சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை, “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டதற்கு பின்னர்தான் மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க வேண்டும்” எனக் கூறி தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மின்கட்டண உயர்வை அமல்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், மின் கட்டணத்தை உயர்த்தவும், இது குறித்து முடிவெடுக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செயப்பட்டது.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத் துறை அதிகாரியை 3 மாதத்துக்குள் தமிழக அரசு நியமிக்க வேண்டும். மேலும் 3 மாத்தில் அதிகாரியை அரசு நியமனம் செய்யவில்லை என்றால், இந்த நீதிமன்றத்தில் மனுதாரர் மீண்டும் முறையிடலாம் என்று உத்தரவிட்டிருந்தது. மேலும், தமிழக அரசின் மின் கட்டண உயர்வு நடவடிக்கைக்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “ஆணையத்தில் ஒரு சட்டத்துறையை சேர்ந்த நபர் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அவ்வாறான நபர் நியமனம் செய்யப்படவில்லை.
உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு சட்டத்துறையை சேர்ந்த நபரை நியமனம் செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
அப்போது தமிழக அரசு தரப்பில், “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு சட்டத்துறையை சேர்ந்த நபரை தேர்ந்தெடுக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டு பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுவிட்டது. அதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் அவர் நியமிக்கப்படுவார்.
மேலும், மனுதாரரின் நோக்கம், மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தவிர, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு சட்டத்துறை உறுப்பினரை நியமனம் செய்ய வேண்டுவது அல்ல. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீ திமன்றம் வழங்கிய கால அளவிற்குள் உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளப்படும்.
எனவே மனுதாரரின் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், “எப்போது உறுப்பினர் நியமிக்கப்படுவார் என்பது உறுதியாக தெரிய வேண்டும். தற்போதைய நிலையில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் அல்லது மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போதைய நிலையில், சட்டத்துறை உறுப்பினர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதால் அவமதிப்பு நடவடிக்கைக்கு எந்த முகாந்திரமும் இல்லை, அதேநேரம், தமிழக அரசு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள கால அவகாசத்துக்குள் உறுப்பினர் நியமனத்தை செய்ய வேண்டும்.
மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது எனக் கூறி அந்த கோரிக்கையை நிராகரித்தனர். மேலும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு சட்டத்துறையைச் சேர்ந்தவரை குறித்த காலத்துக்குள் அரசு நியமிக்கவில்லை என்றால் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.