2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம்: நாசா

நியூயார்க்: 2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம், பணி செய்யலாம் என நாசா தெரிவித்துள்ளது.

புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்பைக் காட்டிலும் துல்லியமான முறையில் நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா கையில் எடுத்திருந்தது. அதன்படி ஆகஸ்ட் மாதமே ஆர்டெமிஸ் ஏவுகணையை விண்ணில் செலுத்த நாசா தயாராகி இருந்தது .எனினும் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நிலவுக்கு ஆர்டெமிஸ் ஏவுகணையை நாசா விண்ணில் செலுத்தியது.

இது குறித்து அமெரிக்க ஓரியன் சந்திர விண்கலத் திட்டத்தின் தலைவர் ஹோவர்ட் ஹூ, கூறும்போது, “ 2030 ஆம் ஆண்டுக்கு முன் மனிதர்கள் நிலவில் வாழலாம். அங்கு அவர்களுக்கு தேவையான பணியை செய்யலாம். இது நாசாவுக்கு வரலாற்று நாள். அதுமட்டுமல்ல விண்வெளி ஆராய்ச்சிகளை விரும்பும் அனைவருக்கும் இது சிறந்த நாள். அதாவது, நாம் சந்திரனுக்குத் திரும்பிச் செல்கிறோம். அதற்காகவே இந்த நிலையான (ஆர்டெமிஸ் ) திட்டத்தை நோக்கி செயல்படுகிறோம். இது மக்களை சுமந்து செல்லும் வாகனமாகும், அது மீண்டும் நிலவில் நம்மைத் தரையிறக்கும்” என்றார்.

முன்னதாக, கடந்த 1969 ஜூலை 20-ம் தேதி அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார். வரும் 2024-ம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஓரியான் (ORION) என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியது. இந்த விண்கலம் கடந்த 2014-ம் ஆண்டில் ஆளில்லாமல் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியது. இந்த நிலையில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ் திட்டத்தில் நாசா ஆர்வம் காட்டி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.