“நான் உங்கள் வீட்டு பிள்ளை”- கன்னியாகுமரியில் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பேச்சு

“மத்திய அரசு மீனவர்களுக்கு எதிராக எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து இந்த திராவிட மாடல் அரசு உங்களோடு நிற்கும்” எம கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை கிராமத்தில் நடைபெற்ற உலக மீனவர் நாள் விழாவில் எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி, குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து நடத்தும்  உலக மீனவர் நாள் வெள்ளி விழா, கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை கிராமத்தில் நடைபெற்றது. விழாவில் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞரணி மாநில செயலாளரும் எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின்  கலந்து கொண்டார்.
image
மேலும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் துறை  அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்  மா.அரவிந்த், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, “நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிக்காக வர இருந்ததை தெரிந்து கொண்ட அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் என்னை இங்கு வர வைத்துள்ளனர். முட்டம் கடற்கரை பகுதிக்கு நான் ஏற்கனவே வந்துள்ளேன். இருந்தாலும் தற்போதுதான் சட்டமன்ற உறுப்பினராக இங்கு வந்துள்ளேன். இயற்கையோடு வாழும் கடலோடிகளோடு மீனவர் தினத்தில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். 
image
நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி, மீனவர்கள் அதிகமாக இருக்கும் தொகுதி. இதனால் தான் நான் உங்கள் வீட்டு பிள்ளை என கூறுகிறேன். நாட்டு படகுகளை எந்திர படகுகளாக்கும் திட்டத்தில் 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு விரைவில் 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் கணவனை இழந்த மனைவிகளுக்கும் வழங்க கோரிக்கை வைத்துள்ளதை விரைவில் நிறைவேற்றப்படும்.
கடல் ஆம்புலன்ஸ் உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது. அவை அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். மத்திய அரசு மீனவர்களுக்கு  எதிராக எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து திராவிட மாடல் கழக அரசு உங்களோடு நிற்கும்” என பேசினார்.
image
தொடர்ந்து மீனவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

#Thoothukudi #Kanyakumari #இல்லந்தோறும்_இளைஞரணி @ARROffice @Manothangaraj #RMahesh @SAustinDMK @SivarajDmk pic.twitter.com/wxH1I3Pa99
— Udhay (@Udhaystalin) November 21, 2022

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.