மத்திய அரசு உணவு மானியம் ரூ.3 லட்சம் கோடியை தாண்டும்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் உணவு மானியம் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனாவின் (பிஎம்ஜிகேஏஒய்) கீழ் வழங்கப்படும் இலவச உணவு தானிய திட்டம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு மானியத்திற்காக மத்திய அரசு செலவிடும் தொகை கணிசமான அளவில் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இலவச உணவு தானிய திட்டத்தால் 80 கோடி பேர் பயன்பெறுவார்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

முன்னதாக 2020-21 பட்ஜெட்டில் அதிகபட்சமாக ரூ.5.2 லட்சம் கோடி மானியமாக வழங்கப்பட்டது. ஆனால் இந்த நிதியில் ரூ.3.4 லட்சம் கோடி தேசிய சிறு சேமிப்பு நிதியிலிருந்து இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) பெற்ற கடனைத் தீர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இது அரசாங்கத்திற்குச் சொந்தமான எப்சிஐ-யின் வட்டிச் சுமையை வெகுவாக குறைக்க உதவியது. மேலும், உணவு தானியங்களுக்கான செலவினத்தையும் இது கட்டுப்படுத்தியது.

பிஎம்ஜிகேஏஒய் திட்டம் 7-வது முறையாக டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் அது மானியத்தை மேலும் ரூ.1.2 லட்சம் கோடி அதிகரிக்கும் என்று மத்திய உணவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.