சந்தானத்தின் இரண்டு தோல்விகளை சரி செய்வாரா 'ஏஜன்ட் கண்ணாயிரம்?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் சந்தானம். கதாநாயகன் ஆசையில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 'இனிமே இப்படித்தான்' படம் மூலம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்து இதுவரை 10 படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் 'தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, ஏ 1, டகால்ட்டி, பாரிஸ் ஜெயராஜ்' ஆகிய படங்கள்தான் வெற்றிப் படங்களாக அமைந்தன.

கடந்த வருடம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான 'டிக்கிலோனா' படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் பல நகைச்சுவைக் காட்சிகள் வீடியோ மீம்ஸ்களாக வெளிவரும் அளவிற்கு அந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்தது. அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சபாபதி, குளு குளு' இரண்டு படங்களுமே ரசிகர்களை நிறையவே சோதித்தது. அடுத்து அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'ஏஜன்ட் கண்ணாயிரம்' படம் இந்த வாரம் 25ம் தேதி வெளிவருகிறது. இந்தப் படத்தைப் பற்றிப் பேசும் போது படத்தின் இயக்குனர் மனோஜ் பீதா, நகைச்சுவையை எதிர்பார்த்து வராதீர்கள் என்று சொல்லிவிட்டார்.

தெலுங்கில் 2019ம் ஆண்டு வெளிவந்த 'ஏஜன்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா' படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப் படம். தெலுங்கில் லாபரகமான படமாக அமைந்த இந்தப் படம் தமிழில் எப்படி அமையப் போகிறது என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.