முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனம்; திருப்பதி கோயில் முக்கிய அறிவிப்பு!

திருமலைக்கு வரும் பக்தர்கள் இலவசமாக ஏழுமலையானை தரிசனம் செய்யும் விதமாக, டோக்கன் வினியோகம் செய்யும் பணிகள் 6 மாதத்திற்கு பிறகு திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் கடந்த 1ம் தேதி மீண்டும் தொடங்கியது.

கடந்த ஏப்ரல் 12ம் தேதி திருப்பதியில் உள்ள இலவச தரிசன டோக்கன் வினியோகம் செய்யப்படும் கவுண்டர்களில் பக்தர்களிடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், இலவச தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

ஆனாலும் திருப்பதி மலைக்கு நேரடியாக சென்று இலவசமாக ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இதனால் பக்தர்கள் திருப்பதி மலைக்கு சென்று வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணியை தேவஸ்தானம் நிர்வாகம் கடந்த 1ம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது.

அதன்படி திருப்பதியில் உள்ள பூதேவி கட்டிட வளாகம், விஷ்ணு நிவாஸம் கட்டிட வளாகம், இரண்டாவது சத்திரம் ஆகியவற்றில் தலா 10 கவுண்டர்கள் வீதம் 30 கவுண்டர் அமைக்கப்பட்டு பக்கர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி நடந்தது.

முதல்நாள் இரவே பக்தர்கள் வரிசையில் காத்திருந்து டோக்கன்களை வாங்கி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தலா 25,000 டோக்கன்களும் வாரத்தின் மற்ற நாட்களில் தலா 15,000 டோக்கன்களும் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்து இருந்தது.

ஒரு முறை ஆதார் அட்டையை சமர்ப்பித்து டோக்கன் பெரும் பக்தர் மீண்டும் 30 நாட்களுக்கு பிறகே, மீண்டும் இந்த வசதியை பெற முடியும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை முதல் அன்றைய தினம் தரிசனம் செய்வதற்கு உரிய டோக்கன் மட்டும் வழங்கப்படும் என்றும் டோக்கன்கள் கிடைக்காத பக்தர்கள் திருப்பதி மலைக்கு நேரடியாக சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம் என்றும் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்யும் விதமாக நாளை (வியாழக்கிழமை) 24ம் தேதி காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது.

ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டை பதிவு செய்துவிட்டு வரவேண்டும் என்று திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

திருப்பதியில் நேற்று மட்டும் 69,587 பேர் தரிசனம் செய்தனர். இவர்களில் 28,645 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். மேலும் ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

திருமலை- திருப்பதியில் கடும் குளிர் காற்று வீசுவதாலும், விட்டு விட்டு பெய்த மழையாலும், ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.