புதுடெல்லி: உ.பி. வாரணாசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு தலைவர் மற்றும் 4 செயற்குழு உறுப்பினர்கள் என 5 நிர்வாகிகள் உள்ளனர். மூன்று வருட கால இப்பதவியில் முதல்முறையாக கே.வெங்கட்ரமண கனபாடிகள் எனும் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது நியமனம் குறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் வெங்கட்ரமண கனபாடிகள் கூறியதாவது: காசி விஸ்வநாதரை தரிசனம்செய்ய வருவோருக்கு உரியவசதிகளை செய்து தருவது, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல் எங்கள் பணியாகும். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் போது என்னை நியமனம் செய்த உ.பி. முதல்வர் யோகிக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி.
கோயிலுக்கு வருபவர்களுக்கு இந்தி மொழி அறியாத பிரச்சினை இல்லாதபடி, நன்கு தமிழறிந்த வழிகாட்டிகளை நியமிக்க விரும்புகிறேன். பகவான் சிவனின் 2 கண்களில் ஒன்று வேதம், மற்றொன்று சங்கீதம். அவர் இசைத்தஉடுக்கையிலிருந்துதான் சங்கீத ஸ்வரம் பிறந்தது. இதில் உருவான சங்கீதத்தை, சிவராத்திரி போன்றவிசேஷ நாட்களில் வடமாநிலங்களில் கலைஞர்களின் நிகழ்ச்சிகளில் இசைக்கின்றனர்.
இதைவிட சிறப்பாக தமிழகத்தை சேர்ந்த கலைஞர்களின் இசை இக்கோயிலில் சிவன் முன் ஒலிக்க வேண்டும் என விரும்புகிறேன். இசைஞானி இளையராஜா, டிரம்மர் சிவமணி, மாண்டலின் ராஜேஷ் உள்ளிட்ட அனைவரின் நிகழ்ச்சிகளையும் இங்கு நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம். விஸ்வநாதர் கோயிலில் அனைவருக்காகவும் ஒலிக்கும் எனது குரலில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவர், வாரணாசியின் அனுமர்படித்துறையில் வாழும் தமிழர்களான பிராமணர்களில் ஐந்தாவது தலைமுறையை சேர்ந்தவர்என்பது குறிப்பிடத்தக்கது.