ஜவான் கதை திருட்டு விவகாரம் : தப்பிய அட்லி?

இயக்குனர் ஷங்கரிடத்தில் உதவியாளராக இருந்தவர் அட்லி. அதன் பிறகு ராஜா ராணி, விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார். தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அட்லியின் முதல் படமான ராஜா ராணி வெளியானபோதே மௌன ராகம் கதையை தழுவி எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. அதையடுத்து விஜய் நடித்த தெறி வெளியானபோது விஜயகாந்தின் சத்ரியன் படத்தை காப்பி அடித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பின்னர் மெர்சல் படம் வெளியானபோது ரஜினியின் மூன்று முகம் மற்றும் கமலின் அபூர்வ சகோதரர்கள் படங்களை தழுவி எடுத்து விட்டதாக கூறப்பட்டது.

தற்போது அவர் ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் ஜவான் படமும் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதையை தழுவி எடுத்து வருவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தயாரிப்பளார் சங்கம் அட்லியை அழைத்து அப்படத்தின் கதை குறித்து விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை முடிவில் ஜவான் படத்தின் கதையும், பேரரசு படத்தின் கதையும் ஒன்றல்ல வெவ்வேறு என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக விஜய்காந்தின் பேரரசு படத்தின் கதையை திருடி ஜவான் படத்தை எடுத்து வருவதாக வெளியான புகாரில் இருந்து அட்லி தப்பித்துள்ளார் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.