கைதி 2 வாய்ப்பை கைப்பற்றுவாரா ராகவா லாரன்ஸ் ?

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் இயக்கத்தில் ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதையடுத்து வெற்றிமாறன் எழுதிய கதையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அதிகாரம் என்கிற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் கைவிடப்பட்டது என்று கடந்த இரண்டு நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில் அது வெறும் வதந்தி தான் என்றும் இந்த படம் நிச்சயம் உருவாகும் என்றும் தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள கைதி-2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தை இயக்கியபோது அதில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் ராகவா லாரன்ஸைத்தான் அணுகியுள்ளார். ஆனால் கால்சீட் காரணமாகவோ அல்லது வில்லனாக நடிக்க தயங்கியதாலோ அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. அதேசமயம் விஜய்சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய பெயரை தட்டிச்சென்றார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். அதை தொடர்ந்து மீண்டும் கைதி-2 படத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்தும் உள்ளார். அந்தப்படத்தில் இதேபோன்று ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ராகவா லாரன்ஸை லோகேஷ் கனகராஜ் அணுகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த முறையாவது இந்த வாய்ப்பை லாரன்ஸ் கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.