மும்பை தாக்குதல் நினைவு தினம் | ‘மறக்கவும் மாட்டோம்… மன்னிக்கவும் மாட்டோம்…’ – இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆறுதல்

புதுடெல்லி: மும்பை தாக்குதல் 14-வது நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுடன் இஸ்ரேல் தோளோடு தோள் நிற்கும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நாவோர் கிலான் தெரிவித்துள்ளார்.

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு 10 பேர் அடங்கிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் குழு தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 166 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு சிக்க, விசாரணைகளுக்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாக கருதப்பட்டவர்கள் மீது இன்னும் பாகிஸ்தானில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கை விரைவுப்படுத்தி நேர்மையாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தின் 14-வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நாவோர் கிலான், “இன்று மும்பை தாக்குதல் நடந்த 14-வது நினைவு தினத்தை அனுசரிக்கிறோம். இந்தியாவும் இஸ்ரேலும் நீண்ட காலமாக பயங்ரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுடன் இஸ்ரேல் தோளாடு தோள் கொடுக்கும். நடந்ததை நாங்கள் இருவரும் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். பயங்கரவாதத்துக்கான நிதி ஆதாரத்தை தடுப்பது குறித்து இரண்டு முறை சர்வதேச மாநாடுகளை ஒருங்கிணைத்துள்ளது வரவேற்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.

மும்பை தாக்குதல் நினைவு தினத்தை ஒட்டி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “பயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப் பெரிய சவால். மும்பை தாக்குதலில் பலியானோரை இன்று நினைவுகூர்கிறோம். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருக்கும் நீதி வழங்க கடமைப்படிருக்கிறோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.