அரசு நிலத்தை உரிமை கோரிய தோட்டக்கலை சங்கம்: ரத்து செய்த நீதிமன்றம்!

சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டி கதிட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி ‘தோட்டக்கலைச் சங்கம்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கி பயன்படுத்தி வந்தார்.

இதை மீட்க் கடந்த 1989ஆம் ஆண்டு அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராகத் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தாக்கல் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 100 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லங்க சான்றை சரிபார்த்ததில் அந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என உறுதி செய்தது. பின்னர், அங்கு அமைந்திருந்த டிரைவ் இன் உணவு விடுதி அனுபவித்த 20 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, தோட்டக்கலை துறை சார்பில் செம்மொழி பூங்கா அமைத்தது.

அந்த நிலத்திற்கு எதிரில் 6.36 ஏக்கர் நிலத்தில் இருந்த தோட்டக்கலை சங்கத்தை காலி செய்ய அரசு நடவடிக்கையை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணை நடத்திய சென்னை மாவட்ட ஆட்சியர், அந்த நிலம் சங்கத்திற்கே சொந்தமானது உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் நில நிர்வாகத்துறை முதன்மை செயலாளர், தானாக முன்வந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நிறுத்திவைத்து, ஏன் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்யக்கூடாது என தோட்டக்கலை சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த நோட்டீசை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் பிரதிவாதியாக உள்ள வழக்கறிஞர் புவனேஷ்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுக்கும் அதிகாரமில்லாத மாவட்ட ஆட்சியர் சுமார் 1000 கோடி மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை சங்கத்திற்கு வழங்கியதாகவும், நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் சரியான நேரத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளார் என்று வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, முதன்மை செயலாளரின் நோட்டீசுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும், தோட்டக்கலைத்துறை சங்கத்திற்கு இந்த சொத்தை வைத்திருக்க எந்த உரிமையும் இல்லை என்று வாதிட்டார்.

இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி, அரசு நிலத்திற்கு உரிமை கோரிய தோட்டக்கலை சங்கத்தின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.