மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோவண்டி பகுதியில் கடந்த மாதம், தட்டம்மை நோய் பாதிப்பால் குழந்தைகள் பலியாகி உள்ளதாக மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று, மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தினர். இதில், 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய சுகாதாரத்துறை குழும அதிகாரிகள், மும்பை வந்து பரிசோதனையில் ஈடுபட்டனர். மும்பையில் இது வரை தட்டம்மை நோயினால் 12 பேர் உயிரிழந்தது பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி கோவண்டி பகுதியைச் சேர்ந்த 8 மாத ஆண் குழந்தைக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு வெண்டிலேட்டரில் சிகிச்சையில் இருந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்தது. இதனால், மும்பையில் தட்டம்மை நோய் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
கஸ்தூரிபா மருத்துவமனை, சிவாஜி நகர் மருத்துவமனையில் தற்போது 40 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு தடுப்பூசி முகாம் மூலம் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநிலத்தை பொறுத்தவரையில் தட்டம்மை உறுதிபடுத்தப்பட்டவர்கள் 603 ஆக உள்ளது. இதில் மலேகாவ் பகுதியில் 62 பேருக்கும், பிவண்டியில் 36 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.