மும்பை விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

மும்பை,

எத்தியோப்பியா நாட்டில் உள்ள அடிஸ் அபபா நகரில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமான நிலையம் சென்ற அதிகாரிகள் எத்தியோப்பியா விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பயணிகள் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களின் உடைமைகளில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அவர்கள் கொண்டுவந்த சூட்கேசில் ஹெராயின் போதைப்பொருள் பாக்கெட்டுக்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்புள்ள 7.9 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜிம்பாப்வே பயணிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.