சோமாலியா: ஜனாதிபதி அலுவலகம் அருகே பயங்கரவாதிகள் தாக்குதல் – 4 பேர் பலி

மொகாதிசு,

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் மத அடிப்படையிலான அரசை நிறுவ அல்-கொய்தா ஆதரவு பெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இவர்கள் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இவர்களை ஒடுக்க கடுமையாக போராடி வரும் சோமாலியா ராணுவம் போராளி குழுக்களின் உதவியுடன் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை மீட்டெடுத்து வருகிறது.

இந்த நிலையில், தலைநகர் மொகாடிஷுவில் ஜனாதிபதி அலுவலகம் அருகே உள்ள ஓட்டல் மீது நேற்றிரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு தக்கபதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டை பல மணி நேரத்துக்கு நீடித்தது.

இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.