ஒரிசா மாநிலம் இந்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25). இவரது மனைவி ஸ்ரீதனா மாஞ்சி (22). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த தம்பதியினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊரில் இருந்து பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வந்தனர். அவர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்து உள்ள கரிவலம்வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினர்.
அஜய்குமார் மாண்டல் பெருமாள்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் அவரது மனைவி ஸ்ரீதனா மாஞ்சி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார்.
இதுகுறித்து உடனடியாக கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஸ்ரீதனா மாஞ்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, அஜய்குமார் மாண்டல் கூலிவேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதனா மாஞ்சி தனது செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரூ.70 ஆயிரம் வரை இழந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது ஆன்லைனில் ரம்மி விளையாடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வடமாநில இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.