10 வயது சிறுமி பலாத்காரம், கொலை; ஆபாச படம் பார்த்த மைனர் சிறுவனின் வெறிச்செயல்

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 90 கி.மீ. தொலைவில் பெமிதரா மாவட்டம் அமைந்து உள்ளது. இதில் கொத்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடு ஒன்றில் 10 வயது சிறுமி தூக்கு போட்ட நிலையில் மர்ம முறையில் உயிரிழந்து காணப்பட்டு உள்ளார்.

இதுபற்றி தகவலறிந்து போலீசார் உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கினர். இதுபற்றி காவல் நிலைய உயரதிகாரி ஆம்பர் சிங் பரத்வாஜ் கூறும்போது, முதல் கட்ட விசாரணை முடிவில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்து கொல்லப்பட்டு உள்ளார் என தெரிய வந்தது.

அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணையை இறுக்கியதில் 17 வயது சிறுவன் இந்த பாதக செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

சிறுவனிடம் போலீசார் விசாரித்ததில், தனது மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை பார்த்து அதற்கு சிறுவன் அடிமையாகி உள்ளான். ஆபாச படங்களை பார்த்த பின்னர், சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து பலாத்காரம் செய்துள்ளான் என போலீசார் கூறியுள்ளனர்.

நடந்த விசயங்களை சிறுமி, தனது குடும்பத்தினரிடம் கூறி விட கூடும் என்ற அச்சத்தில், கைக்குட்டையை கொண்டு சிறுமியின் கழுத்து பகுதியை நெரித்துள்ளான். அதன்பின், சிறுமியை தூக்கில் போட்டபடி செய்து விட்டு பால்கனி வழியே தப்பி சென்றுள்ளான் என போலீசார் கூறினர்.

இதனை தொடர்ந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளூர் கோர்ட்டில் சிறுவனை போலீசார் ஆஜர்படுத்தினர். இதன்பின்னர், துர்க் மாவட்டத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த முகாமுக்கு சிறுவனை போலீசார் அழைத்து சென்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.