அதிமுகவின் ஒற்றை முகமாக மாறியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் தமிழக அரசை கடுமையாக சாடியிருக்கிறார். அண்மைக்காலமாகவே அவர் திமுக அரசை ஷார்ப்பாக அட்டாக் செய்து வருகிறார். எடப்பாடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோதும், தமிழக அரசின் தவறுகள், நிர்வாக சீர்கேடுகளை பட்டியலிட்டார்.
சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துவிட்டதாக தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, 36 மணி நேரத்தில் நடைபெற்றிருக்கும் 12 கொலைகளே அதற்கு உதராணம் என சுட்டிகாட்டியிருக்கிறார். அதிமுக காலத்தில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் இல்லாத மாநிலமாக மாறிவிட்டதாக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
போதைப்பொருள்
திமுக ஆட்சியில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துவிட்டது. இதற்கு ஆளும் கட்சியினரின் பின்புலமே காரணம். 2,138 பேர் போதை பொருள் விற்பதாக கண்டறியப்பட்டிருக்கும் நிலையில்,வெறும் 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பது ஏன்?. எஞ்சியவர்கள் கைது செய்யப்படாததற்கு ஆளும் கட்சியினரின் அரசியல் செல்வாக்கே காரணம். அவர்களின் அழுத்தம் காரணமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பழிவாங்கலை கைவிடுக
எதிர்கட்சிகளை பழிவாங்குவதை கைவிட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கும் கருத்துக்களை ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக தகவல் வருகிறது. ஆனால், அதுபற்றி யோசிக்காமல் தனது குடும்ப நினைவுகளை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் முதலமைச்சர் நாட்டு மக்களின் நிலைமையை பற்றி பேச நினைக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி சாடினார்.
திமுகவின் ரியாக்ஷன் என்ன?
ஆளும் திமுகவுக்கும், ஆளுநர் ரவிக்கும் உறவு சுமூகமாக இல்லை. இதனை பயன்படுத்தி பாஜகவும், அதிமுகவும் அரசியல் செய்து வருகின்றன. அண்மைக்காலமாக திமுக அரசு மீதான புகார்கள் அதிகரிப்பதை பார்த்த எடப்பாடி பழனிசாமி, சமயம் பார்த்து தமிழக அரசை ஷார்ப்பாக அட்டாக் செய்திருக்கிறார். இதற்கு திமுகவின் ரியாக்ஷன் என்ன? என்பதை எதிர்நோக்கியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.