எம்ஜிஆர் படம் வந்தால் போதும்… நினைவுகள் பகிர்ந்த மு.க. ஸ்டாலின்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமைக்கு உரியவர் ஜானகி எம்.ஜி.ஆர். ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு துவக்கவிழா நடத்துவது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். மாணவராக இருந்தபோது பள்ளி நிதி பெறுவதற்காக எம்.ஜி.ஆரை சந்திக்க சத்யா ஸ்டுடியோவுக்கு வந்தேன். எம்.ஜி.ஆர் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நன்றாக படிக்க வேண்டும் என்று என்னிடம் உரிமையுடன் கூறுவார். 

எம்.ஜி.ஆர் நடித்த படம் வெளியாகும்போது முதல் நபராக நான் படத்திற்கு செல்வேன். எம்.ஜி.ஆரும் என்னை தொலைபேசியில் அழைத்து திரைப்படம் எப்படி இருந்தது என கேட்பார். மருதநாட்டு இளவரசி படத்தில் 3 முதலமைச்சர்களின் பங்களிப்பு இருந்தது. தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளை நன்கு அறிந்தவர் ஜானகி அம்மையார். தனிக்கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினாலும் அண்ணாவின் கொள்கையாளராகவே இருந்தார். 

எம்.ஜி.ஆரின் பங்களிப்பு திமுகவில்தான் அதிகம். அதிமுகவைவிட, திமுகவில் தான் எம்ஜிஆரின் பங்களிப்பு அதிகம். எம்ஜிஆர் திமுகவில் அதிக காலம் இருந்தவர். தேசிய இயக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆரை, திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரிக்கு அனுமதி வழங்கியது கருணாநிதிதான்.

டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி உருவாக துணையாக இருந்தவர் கருணாநிதி. செவிக்குறைபாடு, பேச்சுக்குறைபாடு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்; நிச்சயமாக இக்கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.