'இது ராம பக்தர்களின் நிலம்' – மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பிரதமர் மோடி பதிலடி!

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்து உள்ளார்.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில், இரண்டு கட்டங்களாக, தேர்தல் நடக்கிறது. அதன்படி, 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள 93 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டு கட்ட வாக்குப்பதிவில் பதிவாகும் வாக்குகள், 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இத்துடன், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். குஜராத் மாநிலத்தில், தொடர்ந்து 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இந்த முறை, காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகள் நெருக்கடி கொடுத்துள்ளன. இதனால் இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள கலோல் என்ற இடத்தில் இன்று நடைபெற்ற பாஜக பேரணியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தால் காங்கிரஸ் இந்த நிலைக்கு சென்றிருக்காது. அவர்கள் ஒரு குடும்பத்தை நம்புகிறார்கள். ஜனநாயகத்தை அல்ல. ஒரு குடும்பம், அந்தக் குடும்பமே அவர்களுக்கு எல்லாமே தவிர, ஜனநாயகம் அல்ல.

மோடியை குறித்து யார் அதிகமாக விமர்சிப்பது என்று காங்கிரஸ் கட்சியில் தினமும் போட்டி நிலவுகிறது. மோடியை அவமதிப்பது அவர்களின் உரிமை என்று காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸ் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன கார்கேவை மதிக்கிறேன். இது ராம பக்தர்களின் குஜராத் என்பது காங்கிரஸ் கட்சிக்கு தெரியாது. இங்கு மோடி 100 தலைகள் கொண்ட ராவணன்.

காங்கிரஸ் கட்சியினர் எவ்வளவு சேற்றை வீசுகிறார்களோ அவ்வளவு தாமரை அதிகமாக பூக்கும். வரும் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் மக்கள் தாமரைக்கு வாக்களித்து எதிர்க்கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்மையில் அகமதாபாத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “மாநகராட்சி தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தை தான் பார்க்கிறோம். எம்எல்ஏ தேர்தலாக இருந்தாலும், எம்பி தேர்தலாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் மோடியின் முகம் தான் உள்ளது. ராவணன் போல், உங்களுக்கு 100 தலைகள் உள்ளதா..?” என பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.