கர்நாடக மாநிலம் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கேரளாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் பி.டி.எம். லே-அவுட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இரவு வேலை முடிந்ததும் அந்த இளம்பெண் வீட்டிற்கு செல்ல ‘ராபிடோ’ எனப்படும் பைக் டாக்சியில் முன்பதிவு செய்துள்ளார்.
அதன்படி அங்கு வந்த பைக் டாக்சி ஓட்டுனரான சகாபுதீன், அந்த இளம்பெண் பிக்-அப் செய்து மோட்டார் பைக்கில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டு இருந்தார். அப்போது இளம்பெண் மதுபோதையில் இருப்பது சகாபுதீனுக்கு தெரியவந்தது. இந்த சந்தர்ப்பத்தில் அந்த இளம்பெண் மதுபோதையில் சகாபுதீனிடம் தனக்கு சிகரெட் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து இளம்பெண்ணுக்கு சிகரெட் வாங்கி கொடுத்த சகாபுதீன், இளம்பெண்ணை அவர் புக்கிங் செய்த முகவரியில் விடாமல் தான் தங்கி இருந்த அறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. பின்னர் தனது நண்பரான அக்தர் என்பவரையும் தனது வீட்டிற்கு சகாபுதீன் வரவழைத்து உள்ளார். பின்னர் இளம்பெண்ணை சகாபுதீனும், அக்தரும் சேர்ந்து மாறி, மாறி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து வெளியே கூற கூடாது என்று இளம்பெண்ணை இருவரும் மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். கூட்டு பலாத்காரத்துக்கு ஆளானதால் இளம்பெண்ணுக்கு ரத்தபோக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அப்போது இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து இளம்பெண் மருத்துவர்களிடம் கூறினார். உடனடியாக மருத்துவர்கள், எலெக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். பின்னர் இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து இளம்பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்ததாக சகாபுதீன், அவரது நண்பர் அக்தர் ஆகியோரை எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது சம்பவம் நடந்த போது அந்த அறையில் இன்னொரு இளம்பெண்ணும் இருந்ததும், அவர் பலாத்காரத்துக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதனால் அந்த இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டார். 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.