4 பேருடன் திருமணம், மெசேஜ் மூலம் பண மோசடி: போலீசையே அதிர வைத்த பிளே கேர்ள்

மனித இனம் ஒரு சமூகமாய் பல வித முன்னேற்றங்களைக் கண்டு நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டு வந்தாலும், அவ்வப்போது நடக்கும் சம்பவங்களும், நாம் கேள்விப்படும் நிகழ்வுகளும் இந்த முன்னேற்றங்களால் ஏதாவது பிரயோஜனம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகின்றன. நம்பிக்கை என்பது நல்ல விஷயமாக இருந்த காலம் மாறி, யாரை நம்புவதற்கும் நெஞ்சம் மறுக்கிறது. நம்பிக்கை என்ற ஒரு விஷயத்தை பயன்படுத்தி, பலரை ஏமாற்றி பணம் பறித்து, சொல்லொண்ணா துன்பத்துக்கு ஆளாக்கிய ஒரு பெண்ணின் வழக்கு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் செய்த மோசடி பற்றி விரிவாக காணலாம். 

4 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, மேலும் 4 பேரை இன்ஸ்டா, ஷேர் சாட் மூலம் மெசேஜ் செய்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணின் செயல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தாம்பரம் அருகே திருமணம் செய்துவிட்டு பிறகு ஏமாற்றி நகை, பணத்துடன் தப்பிச் சென்று மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணும் அவரது இரண்டாவது கணவனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  

நடந்தது என்ன?

சென்னை தாம்பரத்தை அடுத்த ரங்கனாதபுரத்தை சேர்ந்தவர்  நடராஜன். கடந்த அக்டோபர் மாதம் தன்னுடன் வேலை பார்த்து வந்த அபிநயா என்பவரை வீட்டின் அருகில் உள்ள கோவிலில் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவர் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு மனைவியுடன் மூன்று மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து  வந்த நடராஜனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 

திடீரென ஒரு நாள் இரவு அருகில் படுத்திருந்த மனைவி அபிநயாவை காணவில்லை என எழுந்தவர், தனது மனைவியை வீடு முழுவதும் தேடியுள்ளார். ஆனால் அவரைக் காணவில்லை. அதோடு, பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகைகள் மற்றும் 20,000 ரூபாய் ரொக்கப் பணமும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து தாம்பரம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்த போலீசார் அபிநயா செல்போன் எண்ணை சோதனை செய்த போது அது சுவிட்ச் ஆஃப் என வந்தது. ஆனாலும் அபிநயாவின் அதார் கார்டை வைத்து சோதனை செய்த போது 32 சிம்கார்டுகள் அவர் பயன்படுத்தியது தெரியவந்தது. 

இதனையடுத்து அபிநயா செம்மஞ்சேரியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த போது பல திடுக்கிடும் பின்னணி வெளியானது. அதன்படி மன்னார்குடியை சேர்ந்த விஜய் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் கடந்து 2011ம் ஆண்டு அபிநயா திருமணம் செய்து பின் அவரை விட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. அதனையடுத்து 2013-ம் ஆண்டு செந்தில்குமார் என்பவரை அபிநயா திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பதும் தெரியவந்தது. 

இந்த சூழலில் தான் அபிநயா, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆட்டோ ஓட்டுனர் பன்னீர் செல்வம் என்பவரை திட்டமிட்டு ஏமாற்றி திருமணம் செய்து 10 நாட்கள் மட்டுமே வாழ்ந்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.  

இந்த குற்றச்சம்பவங்கள் அனைத்துக்கும் அபிநயா இரண்டாவதாக திருமணம் செய்த செந்தில்குமார் உடந்தையாக இருந்துள்ளார். திருடிய நகைகளை அவரிடம் கொடுத்து அடகு வைத்து அந்தப் பணத்தை வைத்து இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். அபிநயா கொடுத்த தகவலின் அடிப்படையில், தாம்பரம் காவல் நிலைய உதவி ஆணையர் ஸ்ரீநிவாசன் தலைமையிலான காவல் ஆய்வாளர் சார்லஸ், உதவி ஆய்வாளர்கள் கண்ணியப்பன், கார்த்திகேயன், வீராசாமி உள்ளிட்டோர் இணைந்து இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான செந்தில்குமாரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

பொதுவாக ஆண்கள், பெண்கள் போல இணையத்தில் மெசேஜ் செய்து மோசடி செய்வதுண்டு. ஆனால் இங்கே பிளே பாய் போல பிளே கேர்ள் ஒருவர் செய்துள்ள இந்த திருமண மோசடி பலரையும் அதிர வைத்துள்ளது. அபிநயாவை விசாரித்த காவல்துறையினரும் அவர் செய்த மோசடிகளைக் கேட்டு ஆட்டம் கண்டுள்ளனர். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.