சூடுபிடிக்கும் நகைச்சுவை நடிகர் பட டைட்டில் விவகாரம்

மலையாளத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. சமீபகாலமாக குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் சுராஜ், சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது ஹேம்நாத் என்பவரது டைரக்ஷனில் சுராஜ் நடித்துள்ள ‛ஹிகுடா' என்கிற படம் வரும் டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டைட்டிலை பயன்படுத்தக்கூடாது என்று கூறி கேரள பிலிம்சேம்பர் உத்தரவிட்டுள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல மலையாள எழுத்தாளர் என் எஸ் மாதவன் என்பவர், தான் ‛ஹிகுடா' என்கிற பெயரில் ஒரு நாவலை எழுதி உள்ளதாகவும் விரைவில் அந்த நாவல் படமாக இருப்பதாகவும், தனது நாவலின் பெயரை சுராஜ் வெஞ்சாரமூடு படத்திற்கு, தன் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் கூறி இந்த டைட்டிலை பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு பிலிம் சேம்பரில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்தே இந்த தடை தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இது மலையாள திரையுலகில் உள்ள பல இயக்குனர்கள், கதாசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரபல இயக்குனர் வேணு கூறும்போது, “எழுத்தாளர் என்.எஸ் மாதவன் தான் எழுதிய இந்த நாவலுக்கு ஹிகுடா என பெயர் வைக்க யாரிடமாவது அனுமதி வாங்கினாரா? அதுமட்டுமல்ல ஹிகுடா என்கிற பெயர் பிரபல கொலம்பியா கால்பந்தாட்ட கோல்கீப்பர் ஒருவரது பெயர். அனைவருக்கும் தெரிந்த அவரது பெயரை தான் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என அவர் அடம்பிடிப்பதும், அதுதான் சரி என்பது போல கேரள பிலிம்சேம்பர் இப்படி ஒரு தடை விதித்து இருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

பிருத்விராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் படத்தின் கதையை அதற்கு முன்பு நாவலாக அதே பெயரில் எழுதிய எழுத்தாளர் பென்யமின் இந்த விவகாரம் பற்றி கூறும்போது, “இந்த விவகாரத்தில் என்.எஸ் மாதவனை என்னால் ஆதரிக்க முடியாது. ஏதோ அவர் மட்டுமே ஹிகுடா என்கிற பெயருக்கு உரிமையாளர் என்பது போன்று சித்தரிப்பது கேலிக்கூத்தான ஒன்று. இதற்கு முன்பும் இதேபோல இப்படி பல நாவலின் பெயர்கள் பல படங்களுக்கு வைக்கப்பட்டு வெளியாகியுள்ளன. இந்த நாவலில் எழுதப்பட்டுள்ள கதை, இந்த படத்தின் கதையுடன் தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே இந்த பிரச்னையை என்.எஸ் மாதவன் கிளப்ப வேண்டுமே தவிர, தனது நாவலுக்கு வைத்துள்ளதாலேயே இந்த டைட்டிலுக்கு உரிமை கொண்டாடுவது தவறு” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.