ஜெயலலிதா நினைவு நாள் இன்றுதான்… கொளுத்தி போடும் அதிமுக முக்கிய பிரமுகர்

முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினரோடு சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று (டிச. 4) மரியாதை செலுத்த வருகை தந்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய கே.சி.பழனிசாமி,”முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான நினைவு தினம் இன்றுதான். எனவே இன்றைக்கு நாங்கள் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறோம்.

இபிஎஸ் ஓபிஎஸ் ஏற்க வேண்டும் 

ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அதை அமைக்க வலியுறுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே இவர்கள் இருவரும் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆணையத்தின் அறிக்கையில் ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதி மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வரையில் அவர்கள் இருவரும் ஆணையத்தின் அறிக்கையை அதில் குறிப்பிட்டுள்ள தேதியை நாங்கள் ஏற்கவில்லை என்று எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அடுத்த ஆண்டில் இருந்தாவது உண்மையான நினைவு நாளான டிசம்பர் 4ஆம் தேதியை ஜெயலலிதாவின் நினைவு நாளாக கடைபிடிக்க வேண்டும்.

அதேபோன்று, கொடநாடு சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தில் முறையான விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். தமிழக அரசும், மத்திய அரசும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை டிசம்பர் 4ஆம் தேதி என்று திருத்தம் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.