“தி.மு.க என்றாலே ஊழல்தான் என்பது போலவே அதன் செயல்பாடு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்” என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த திண்டுக்கல் மாவட்ட அ.ம.மு.க மகளிரணி செயலாளர் ரஞ்சிதம் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வருகிறது. போடாத ரோடுகளுக்குக்கூட பணம் பெறுகின்றனர். தி.மு.க என்றாலே ஊழல்தான் என்பதுபோலவே அதன் செயல்பாடு உள்ளது. அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். ஆனால், மதச்சார்பற்ற கட்சி என கூறிக்கொண்டு இந்து மதத்திற்கு எதிராக தி.மு.க பேசிவருகிறது.
தி.மு.க அரசு, தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, தி.மு.க-விற்கு கூட்டணி பலம் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள்.

அ.ம.மு.க-வின் தேர்தல் வியூகம் 2023-ல் வெளிப்படும். ஜெயலலிதா மறைவிற்குப் பின் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்ஸிடம் இருக்கும் அதிகாரம், பணத்தை நம்பித்தான் அவர்களுடன் சிலர் இருந்தனர்.
இன்று அ.தி.மு.க நீதிமன்றத்தின் மூலம் செயல்படாமல் இருப்பதற்கு ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்தான் காரணம். இவர்களின் பிரச்னை அ.ம.மு.க எதற்காக தொடங்கப்பட்டது என்பதை புரியவைத்துள்ளது.

ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்” என்றவர், “சசிகலா மௌனமாக இருப்பது” பற்றிய கேள்விக்கு “அது குறித்து அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்” என்றார்.