புதுச்சேரி ஐஏஎஸ் அதிகாரிகள் 15 மாத விமான செலவு ரூ.17 லட்சம்: ஆளுநர், மத்திய உள்துறையில் புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஐஏஎஸ் அதிகாரிகளின் 15 மாத விமான செலவு ரூ.17 லட்சமாக இருப்பதால் அவசியமற்ற விமான பயணங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடமும், மத்திய உள்துறையிலும் புகார் தரப்பட்டுள்ளது.

மிகச் சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மிக அதிகப்படியாக 25-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணிபுரிந்து வந்ததால், இவர்களுக்கு ஊதியம், வாகனம், குடியிருப்பு சீரமைப்பு போன்ற காரணங்களால் புதுச்சேரி அரசிற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தொடர்ந்து புகார் கடிதம் அளித்து வந்ததால் தற்போது 13 ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து விமான பயணம் செல்வதாக தகவல்கள் வந்தன.

இதையடுத்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி, ஆர்டிஐ மூலம் ஐஏஎஸ் அதிகாரிகள் விமான பயணம் தொடர்பாக மனு தந்தார். அதில் கிடைத்த தகவல் படி ஆளுநரிடமும், மத்திய உள்துறையிலும் அளித்த புகாா் பற்றி கூறியதாவது.

ஆர்டிஐ தகவல்

“ஐஏஎஸ் அதிகாரிகள் அவசியம் இன்றி அடிக்கடி விமானப் பயணம் செய்து வருவதை அறிந்து, இதுகுறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டதற்கு அவர்கள் அளித்த தகவலின்படி 16.06.2021 முதல் 24.09.2022 வரையிலான 15 மாத காலத்தில் மட்டும் 16,77,750/- லட்ச ரூபாய் விமானப் பயணத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.

தற்பொழுது அலுவலக கடித பரிமாற்றங்கள் அனைத்தும் இ-பேப்பர், இ-மெயில் மூலமும், கருத்தரங்கங்கள், ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் பெரும்பாலும் வீடியோ கான்பரசிங் மூலமே நடத்தப்படும் போது இவர்கள் இவ்வளவு லட்ச ரூபாய் செலவு செய்து விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

மேலும், புதுடெல்லியில் புதுச்சேரி அரசு சம்பந்தமான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள புதுச்சேரி அரசு சார்பில் சிறப்பு ஆணையர் என ஒரு அதிகாரி மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி என ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள பொழுது இவர்கள் என்ன பணிக்காக, யாரை சந்திக்க விமானப் பயணம் மேற்கொண்டனர். குறிப்பாக புதுச்சேரியிலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பெரும்பாலானோர் வடமாநிலங்களை சார்ந்தோராக இருப்பதால் இவர்கள் அலுவலக பணி என பயணம் மேற்கொண்டு சொந்த ஊருக்கு சென்று வருகின்றனரோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. எனவே புதுச்சேரி அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் அவசியமற்ற விமான பயணங்களை தவிர்க்க தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநர், மத்திய உள்துறை செயலரிடம் மனு தந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.