பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கல்வராயன்மலை: கல்வராயன்மலையில் தொடர் மழை பெய்து வருவதால் பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் நேற்று மதியம் 12 மணியில் இருந்து சுமார் 3.30 மணி வரை கனமழை பெய்தது.

இதன் காரணமாக பெரியார் நீர்வீழ்ச்சியில் தற்போது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்வீழ்ச்சியில் குளித்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்து வெளியேறினர். அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை, காவல் துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோமுகி அணையில் நீர்மட்டம் வடிந்து வரும் நிலையில், கல்வராயன் மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக கல்படை, பொட்டியம், மாயம்பாடி ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விரைவில் கோமுகி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலை வரலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.