தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு அவ்வப்போது பொதுமக்களுக்கு புதிய நிபந்தனைகள் விதித்து வரும் நிலையில் தற்போது வங்கி கணக்கு இல்லாத ரேஷன் அட்டைதாரர்கள் மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்தவகையில், தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சம் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் வங்கி கணக்கு இல்லாமல் இருப்பதாகவும் அவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வங்கி கணக்கு வைத்து இருந்தாலும் ஆதார் எண் இணைக்காவிட்டால் வங்கிக்கணக்கு இல்லை என்றே வருவதாகவும் இதனாலேயே வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் உடனடியாக வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் தொடங்கப்படும் வங்கி கணக்குக்கு ஜீரோ பேலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவை பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறை சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அத்துடன், வங்கி கணக்கு இல்லாதவர்களின் விவரங்களை உடனடியாக தொகுத்து வழங்க வேண்டும் என்றும், ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்து இருந்தால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள், ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதனால் இந்த பணிகளில் ரேஷன் கார்டுதாரர்கள் மும்முரமாக ஈடுபட்டு இருந்த நிலையில் தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி இல்லாத கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று 62 பேருக்கு ரூ.22 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கடன் உதவியை வழங்கினார்.
இதன் பிறகு தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
தமிழ்நாட்டில் 2 கோடியே 23 லட்சம் ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். இதில், 14 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்கள் மட்டுமே ரேஷன் கார்டில் வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைக்காமல் உள்ளனர்.
இவர்களில் 95 சதவீதம் ரேஷன் கார்டுதாரர்கள் இணைக்கப்பட்டு உள்ள நிலையில் மீதம் உள்ளவர்களை இணைக்கும் பணி நடக்கிறது. ரேஷன்கார்டு தாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை.
ரேஷன் கார்டில் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்கிற எண்ணம் இல்லை. இவ்வாறு கூட்டுறவுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.