திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே ஷிகெல்லா வைரஸ் நோய் பாதித்த 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் உள்பட சில மாவட்டங்களில் ஷிகெல்லா வைரஸ் நோய் பரவி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் இந்நோய் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மலப்புரம் மாவட்டம் திரூரங்காடி பகுதியைச் சேர்ந்த பகத் என்பவரின் மகள் பாத்திமா ரஹா (10) என்ற சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சிறுமியை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு நடத்திய பரிசோதனையில் அந்த சிறுமிக்கு ஷிகெல்லா வைரஸ் பரவியிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி பாத்திமா ரஹா நேற்றுமுன்தினம் இரவு மரணமடைந்தார். இதற்கிடையே இந்த சிறுமியின் சில உறவினர்களுக்கும் ஷிகெல்லா நோயின் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.