வடிவேலுவுக்கு அடுத்து யோகிபாபுவா… போடப்படுமா ரெட் கார்ட்?… கோலிவுட்டில் பரபரப்பு

ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த யோகிபாபு தனது அசாத்தியமான நடிப்பால் முன்னணிக்கு வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் வடிவேலு ஒதுங்க, விவேக் இறக்க, சந்தானம் ஹீரோவாக மாற, சூரி, சதீஷின் காமெடி பலருக்கு போர் அடிக்க நகைச்சுவைக்கான வெற்றிடத்தை யோகிபாபு நிரப்பினார். தற்போது அவர் பல படங்களில் நடித்துவருகிறார். வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடிக்கிறார் யோகிபாபு. தொடர்ந்து காமெடியில் மட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கிவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த மண்டேலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு தேசிய விருதையும் பெற்றது.

காமெடி, ஹீரோ மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் கலக்கிவருகிறார் யோகி. சமீபத்தில் லவ் டுடே படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து அதுபோன்ற கதாபாத்திரங்களிலும் யோகிபாபு நடிக்க வேண்டுமெனவும் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இதற்கிடையே யோகிபாபு கின்னஸ் கிஷோர் என்பவரது இயக்கத்தில் தாதா என்ற படத்தில் நடித்திருக்கிறார். நிதின் சத்யா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் யோகிபாபுவின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்தப் படத்தில் தான் ஹீரோ இல்லை நிதின் சத்யாதான் ஹீரோ. நான் ஹீரோ இல்ல மக்களே நம்பாதிங்க என பதிவிட்டிருந்தார். மேலும் தன்னுடைய புகைப்படத்தை வைத்து படத்துக்கு விளம்பரம் செய்ய் வேண்டாம் என படக்குழுவிடம் யோகிபாபு கேட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் தாதா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது பேசிய படத்தின் இயக்குநர், “யோகிபாபு திரைப்படத்தில் நடிக்க தடைவிதிக்க வேண்டும். தாதா திரைப்படத்தில் நடிக்கவில்லை என யோகிபாபு ட்வீட் செய்தாலும், அதுகுறித்து கவலையில்லை. தாதா படத்தை எந்த தயாரிப்பாளரும் வாங்கவிடாமல் தடுத்ததால், யோகிபாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம்” என்றார். எனவே யோகிபாபுவுக்கு ரெட் கார்ட் போடப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, வடிவேலு, சிம்பு உள்ளிட்டோர் ரெட் வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.