சாணார்பட்டி பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

சாணார்பட்டி: சாணார்பட்டி ஒன்றியத்தில் 21 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாகும். கடந்த 10 வருடங்களாக இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் விவசாயத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக பருவமழை நன்றாக பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் விவசாய தொழில் நன்றாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் விவசாய கிணறுகளுக்கு செல்லும் மின்கம்பங்கள் சேதடைந்துள்ளன. இந்த மின்கம்பங்கள் எப்போதும் கீழே விழும் நிலையில் உள்ளன.

இதனால் விவசாய பணிக்கு செல்லும் விவசாயிகள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என பலமுறை மின்வாரியத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை இல்லை. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.