கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் அண்ணாமலை நகரில் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்தக் கல்லூரியில் நர்சிங் படிப்பதற்காக ஏராளமான மாணவர்கள் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை கல்லூரியில் வகுப்புகள் முடிந்து மாணவிகள் வழக்கம் போல் விடுதிக்கு வந்தனர். விடுதியில் மாணவிகளுக்கு இரவு உணவாக தயாரிக்கப்பட்ட பூரி மற்றும் கிழங்கினை மாணவிகளுக்கு வழங்கினர். மாணவர்கள் உணவினை சாப்பிட்ட பின்னர் தங்களது அறைக்கு சென்றனர்.
அப்போது திடீரென ஒவ்வொரு மாணவியாக வெளியில் ஓடி வந்து வாந்தி எடுத்தனர். அதில், ஒரு சில மாணவிகள் மயங்கி கீழே விழுந்தனர். இதுகுறித்து தகவலறிந்த விடுதி காப்பாளர் மாணவிகளை ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு நர்சிங் மாணவிகள் 15 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்ததாவது, “இரவு சாப்பிட்ட பூரி மற்றும் கிழங்கு உணவில் ஏற்பட்ட ஒவ்வாமையால் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.