‘மோடி… மோடி’… ஃப்ளையிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் துவங்கினார். தொடர்ந்து, கேரளாவிற்கு சென்ற அவர் அங்கு சுமார் 19 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். இதையடுத்து, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, தற்போது ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ளது.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா முதன்முறையாக காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தான் சென்றுள்ளது. அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராகுலின் பாதயாத்திரையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் குழுமியிருந்த கூட்டத்தினர் ராகுலை பார்த்து, ‘மோடி.. மோடி…’ என முழக்கமிட்டனர். அவர்கள் பாஜக ஆதரவாளர்கள் என தெரிகிறது. இதனை கவனித்த ராகுல் காந்தி அவர்களை நோக்கி கையசைத்து, அவர்களுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து விட்டு தனது நடைபயணத்தை உற்சாகமாகத் தொடர்ந்தார்.

ராகுல் காந்தியின் நடைபயணம் நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. அவரது பயணத்தின் சாமானிய மக்களும் கலந்து கொள்கின்றனர். அவர்களோடு செல்ஃபி எடுப்பது, சைக்கிள் ஓட்டுவது, புல்லட் ஒட்டுவது, ஓட்டப்பந்தயம் மேற்கொளது என உற்சாகமாக ராகுல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், தொடக்கம் முதலே ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையின் போது, தன்னை சீண்டும் வகையில், ‘மோடி, மோடி’ என முழக்கமிட்டவர்களை பார்த்து ராகுல் காந்தி முத்தம் கொடுத்து விட்டு சென்றது கவனம் ஈர்த்துள்ளது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பார் பேரறிஞர் அண்ணா. எதிர்க்கட்சிகளை வசீகரிக்கவும், வளைக்கவும் அறிஞர் அண்ணா பயன்படுத்திய வார்த்தை அவை. அந்த வகையில், பாஜக தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பது போல, தன்னை சீண்டியவர்களுக்கு ராகுல் காந்தி அன்பால் பதிலடி கொடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் நெகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.