லக்கிம்பூர் கேரி வழக்கு: மத்திய அமைச்சர் மகனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு!

விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை விடுவிக்க லக்கிம்பூர் மாவட்ட நீதிமன்றம் மறுத்து விட்டது.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது மோதியாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்தது.

மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏறியதில் விவசாயிகள் உயிரிழந்ததாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டின. லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில், 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 8 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விவசாயிகள் மீது, மத்திய இணை அமைச்சர் மகனின் கார் ஏறி கொல்லப்பட்டதற்கான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இதுவரை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர் உட்பட வழக்கு தொடர்புடையவர்களை கைது செய்தனர்.

காவல் துறையும் நிர்வாகமும் விசாரணையில் மெதுவாகச் செல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் தலைமையிலான ஒரு குழுவை
உச்ச நீதிமன்றம்
நியமித்தது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா லக்கிம்பூர் கேரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை இன்று விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி லக்ஷ்மி காந்த், வழக்கில் இருந்து ஆஷிஷ் மிஸ்ராவை விடுவிக்க மறுத்து விட்டார். இதை அடுத்து அவர் மீதும், ஏனைய குற்றவாளிகள் மீதும் நீதிமன்றத்தில், நாளை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி லக்ஷ்மி காந்த் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.