இன்று சென்னை, மாமல்லபுரத்தில் திமுக நிர்வாகி சுந்தர் வீட்டில் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பின்னர், அவர் பேசியதாவது:-
“தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகாலம் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் பாழாய் போன நிதிநிலைமையை சீர்செய்து, பல்வேறு திட்டங்களை இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

இதற்காக 10 ஆண்டுகால ஆட்சியையும் சீரழிவு என்று சொல்லிவிட முடியாது. முதல் ஆறு ஆண்டுகள் மட்டும்தான் சீரழிவு. கடைசி நான்கு ஆண்டுகள் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர் என்று தான் நாம் சொல்ல வேண்டும்.
அந்த நான்கு ஆண்டுகால பேரிடரை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யும் பணியைத் தான் இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. இதில் உழைப்பவர்களுக்கு நிச்சயம் அதற்குரிய வாய்ப்பு உண்டு என்பதற்கு சுந்தரைப் போன்றவர்கள் தான் உதாரணம். கட்சியில் இன்று பதவி வரும், நாளை போகும். ஆனால், கழகம் தான் நம்முடைய அடையாளம், நம்முடைய இயக்கம், நம்முடைய உயிர் மூச்சு.
அப்படிப்பட்ட இந்த இயக்கத்தை சுந்தர் போன்றவர்கள் தன்னுடைய உயிர் மூச்சாக கருதி காத்து வருவதால் தான், 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆறாவது முறையாக இன்றைக்கு ஆட்சியை, அதுவும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டுக்கு விளக்காகவும், நாட்டிற்கு தொண்டர்களாகவும் மணமக்கள் வாழ்க! வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தி, அதே சமயம், சுந்தர் ஆற்றக்கூடிய பணிகளை என்னால் நிச்சயமாக நம்மால் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.
அதேபோல், இந்த இயக்கத்திற்கு சுந்தர் ஆற்றக்கூடிய அந்தப் பணிகள் மேலும், மேலும் வளரவேண்டும் என்ற உணர்வோடு தான், நான் மணமக்களை வாழ்த்துகிறேன் என்று சொல்லி, மணமக்கள் வாழ்க! வாழ்க! வாழ்க! என்று கூறி விடைபெறுகிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.